ஐம்பெரும் காப்பியங்கள் (Aimperum Kappiyangal)

சிலப்பதிகாரம் (Silappadhikaram)
மணிமேகலை (Manimekalai)
சீவக சிந்தாமணி (Seevaga Chintamani)
வளையாபதி (Valaiyapathi)
குண்டலகேசி (Kundalakesi)

ஐஞ்சிறு காப்பியங்கள் (Iynchiru Kaappiyangal)

உதயண குமார காவியம் (Uthayana Kumara Kaaviyam)
நாக குமார காவியம் (Naga Kumara Kaaviyam)
யசோதர காவியம் (Yasodara Kaaviyam)
சூளாமணி (Choolaamani)
நீலகேசி (Neelakesi)

எட்டுத்தொகை (Ettuthogai)

நற்றிணை (Narrinai)
குறுந்தொகை (Kurunthokai)
ஐங்குறுநூறு (Ainkurunooru)
கலித்தொகை (Kalithokai)
அகநானூறு (Agananooru)
பதிற்றுப்பத்து (Pathirruppattu)
புறநானூறு (Purananooru)
பரிபாடல் (Paripadal)

காசியில் சூரிய பகவானை வழிபட்டவர்கள்!

ADVERTISEMENTS









காசி என்று போற்றப்படும் வாரணாசி திருத்தலத்தில் சிவன், அம்மன், விநாயகருக்கு நிறைய கோயில்கள் இருப்பது போலவே சூரிய பகவானுக்கும் கோயில்கள் உள்ளன. பகீரதன், தன் மூதாதையர் புனிதமடைவதற்காக கடுமையாகத் தவம் புரிந்து, பூலோகத்திற்கு கங்கை நதியை வரவழைத்தான். அந்த வேளையில் சூரிய பகவான் பூமிக்கு வந்து காசி விஸ்வநாதரை வழிபட்டுக் கொண்டிருந்தான். கங்கை நதி காசிக்குள் பிரவேசித்ததை அறிந்த சூரிய பகவான், கங்கையையும் வழிபட்டுப் பேறுகள் பெற்றான். அதன் நினைவாக காசி திருத்தலத்தில் லலிதாகாட் படித்துறை அருகில் ஒரு சூரியன் ஆலயம் உள்ளது. இங்குள்ள சூரிய பகவானை கங்காதித்யர் என்று போற்றுவர். காஷ்யப மகரிஷியின் மனைவியான வினதைக்கு மூன்று முட்டைகள் பிறந்தன. முதல் முட்டையிலிருந்து ஆந்தை வெளிப்பட்டது. இரண்டாவது முட்டையிலிருந்து அருணன் வெளிப்பட்டான். இவன் முட்டையிலிருந்து வெளிவரும்போதே ஊனமாகப் பிறந்தான்.

மூன்றாவது முட்டையிலிருந்து கருடன் தோன்றினான். இம்மூவரில் ஆந்தையும் அருணனும் காசித் திருத்தலத்திற்கு வந்து அங்கு எழுந்தருளியுள்ள சூரிய பகவானை வழிபட்டார்கள். அவர்களுக்கு அருள்புரிய திருவுளம் கொண்ட சூரிய பகவான் அருணனை தனது தேரோட்டியாகப் பதவி கொடுத்து வைத்துக்கொண்டார். ஆந்தை மகாலட்சுமியின் வாகனமாக மாறும் பாக்கியத்தை அளித்தார். அருணனை தேரோட்டியாக ஏற்றுக் கொண்ட சூரிய பகவானை அருணாதித்யர் என்று போற்றுவர். இந்தச் சூரிய பகவான் ஸ்ரீ திரிலோசனர் ஆலயத்தில் அருள்புரிகிறார். பகவான் கிருஷ்ணரின் மகன் சாம்பன் தன் தந்தையால் சாபம் பெறும் நிலைக்கு ஆளானான். அதன் விளைவால், சாம்பன் தொழுநோயால் பாதிகப்பட்டான். மகன் படும் துன்பத்தைக் கண்ட கிருஷ்ணர், சாம்பனுக்கு சாபவிமோசனம் பெறும் வழியைக் கூறினார். அதன்படி காசிக்கு வந்த சாம்பன் அங்கு எழுந்தருளியுள்ள சூரிய பகவானை வழிபட்டு சாபவிமோசனம் பெற்றான். சாம்பன் வழிபட்ட சூரியன் சாம்பாதித்யர் என்று அழைக்கப்படுகிறார். சாம்பன் சூரியனுக்கு பொங்கலிட்டு வழிபட்டு புனிதம் அடைந்த நாள் தைப் பொங்கல் என்று புராணம் கூறும்.

காஷ்யப மகரிஷிக்கும் வினதைக்கும் பிறந்த மூன்று பிள்ளைகளில் கருடனும் ஒருவர். இந்த கருடன், அளப்பரிய சக்தியைப் பெறுவதற்காக தன் தாய் வினதையுடன் சூரிய பகவானை வழிபட்டு பலம் பெற்றார். அதன் விளைவாக மகாவிஷ்ணுவின் வாகனமாகவும் திகழ்கிறார் என்பது புராணம். தாயும் மகனும் வழிபட்ட சூரிய பகவானை சு÷ஷால்கா ஆதித்யர் என்று போற்றுவர். காசியில் புகழ்பெற்ற ஸ்ரீதிரிலோசனர் மற்றும் ஸ்ரீகாமேஸ்வரர் ஆலயப் பிராகாரத்தில் இந்தச் சூரிய பகவான் எழுந்தருளியுள்ளார். தொழுநோயால் பாதிக்கப்பட்டு துன்பப்பட்ட விமலன் என்பவன், ஒரு முனிவரைச் சந்திக்கும் பாக்கியத்தைப் பெற்றான். அவன் நிலையை அறிந்த முனிவர், நீ காசியில் சிவலிங்கம் நிறுவி சூரிய பகவானை வழிபட்டால் உன் துன்பம் என்று ஆலோசனை சொன்னார். முனிவர் சொன்னதுபோல் காசிக்கு வந்த விமலன், சிவலிங்கத்தை நிறுவி, சூரிய பகவானை வழிபட்டான். அதில் மகிழ்ந்த சூரிய பகவான், இனி உன் வம்சத்தில் யாருக்குமே தொழுபோய் வராது என்று அருளினார். இந்தக் கோயில் காசியில் கதோலியா என்ற இடத்திற்கு அருகில் உள்ள ஜங்கம்பாடியில் உள்ளது. இங்கு எழுந்தருளியுள்ள சூரிய பகவானை விமலாதித்யர் என்று கூறுவர்.

சூரிய பகவானின் மகன்களில் ஒருவர் எமதர்மராஜன், இவர் தனக்கு அதிக சக்தி வேண்டும் என்று தன் தந்தை சூரிய பகவானுக்கு ஆலயம் நிர்மாணித்து, தவமியற்றி வரங்கள் பெற்றதாகப் புராணம் கூறும். எமன் நிறுவிய சூரிய பகவானை எமாதித்யர் என்பர். இக் கோயில் காசியில் சங்கடாகாட் என்னுமிடத்தில் உள்ளது. பஞ்சபாண்டவர்கள் வனவாசத்தின்போது, அவர்களின் பத்தினியான திரௌபதி, சூரிய பகவானைத் தியானித்து அட்சய பாத்திரம் பெற்றதாகப் புராணம் கூறுகிறது. திரௌபதி வழிபட்ட சூரிய பகவான் கோயில் விஸ்வநாதர் ஆலயத்திற்கு அருகில் அட்சய பீடத்தில் உள்ளது. இங்கு அருள்புரியும் சூரிய பகவானை திரௌபதி ஆதித்யர் என்பர். நான்கு வேதங்களிலும் புலமை பெற்றிருந்த விருத்தன் என்பவன் தன் இளமை மாறி முதுமைத் தோற்றத்தில் காட்சி தந்தான். அவன் காசியில் சூரிய பகவானை கடுமையாகத் தியானித்து மீண்டும் தன் இளமையைப் பெற்றான். விருத்தன் வழிபட்டுப் பேறு பெற்றதால் சூரிய பகவான் விருத்தாதித்யர் என்று போற்றப்படுகிறார். இந்தக் கோயில் காசியில் மீர்காட் என்னுமிடத்தில் உள்ளது. சூரிய பகவானை தினமும் வழிபட்டால் ஆரோக்கியமான வாழ்வு கிட்டும்; கண்பார்வை நன்கு தெரியும்; சரும நோய்கள் வராது; மன சஞ்சலங்கள் நீங்கும் என்று சாத்திரங்கள் கூறுகின்றன. மனசஞ்சலங்களையும் மற்ற துன்பங்களையும் தீர்த்து வைப்பதால் சூரிய பகவானை லோலார்க்கர் என்று போற்றுவர். இந்த சூரிய பகவான் கோயில் அதிசங்கமத்தில் புகழ்பெற்ற லோலார்க்க குண்டம் அருகில் உள்ளது.

காசி திருத்தலத்தின் வடக்கே அலேம்புரா என்னும் இடத்தில் உத்திர அர்க்க குண்டம் என்னும் சூரிய தீர்த்தக்குளம் உள்ளது. இதை வக்ரியா குண்டம் என்றும் கூறுவர். அங்கு ஒரு ஆடும் ஒரு பெண்ணும் கடுமையாகத் தவமிருந்து சூரிய பகவானின் அருளைப் பெற்றனர். இங்கு எழுந்தருளியுள்ள சூரிய பகவானை உத்திர அர்க்கர் என்பர். சூரிய பகவானை காசியில் வழிபட்டுப் பேறுபெற்றவர்கள் மேலும் பலர் உண்டு. இருந்தாலும் சூரிய பகவானே தான் மேலும் பலம் பெறுவதற்காக காசி திருத்தலத்தில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டிருப்பதாக காசி காண்டம் கூறுகிறது. அந்த வகையில் ஸ்ரீமன் நாராயணனான கேசவனின் அருளால் சிவலிங்கம் அமைத்து சிவபெருமானை வழிபட்டார். சூரியன் வழிபட்ட இந்த ஆலயம் வருணா சங்கமத்தில் உள்ளது. சேவகன் அருளால் லிங்கம் அமைத்து வழிபட்டதால் இங்கு எழுந்தருளியுள்ள சூரிய பகவானை கேசவாதித்யர் என்பர். முன்னொரு காலத்தில் சூரிய பகவான் காசி திருத்தலத்தில் ஈசனையும் உமையையும் ஸ்ரீ மங்கள கௌரி - ஸ்ரீ கபஸ்தீஸ்வரர் என்ற திருப்பெயருடன் பிரதிஷ்டை செய்து சுமார் ஒரு லட்சம் ஆண்டுகள் கடுமையாகத் தவம் புரிந்தார். சூரியனின் தவத்தினைப் போற்றிய சிவபெருமான் சூரியனுக்கு மயூகன் என்று பெயர் சூட்டி, சூரியன் கேட்ட வரத்தை அருளினார்.

ஈசனிடம் அருள் பெற்ற இந்த சூரியன், மயூகாதித்யர் என்று போற்றப்பட்டார். இந்த ஆலயம் கங்கைக் கரையோரம் உள்ள பஞ்சகங்காகாட் அருகில் உள்ளது. காசிக்கு புனிதப்பயணம் செல்பவர்கள், அங்குள்ள சூரிய பகவான் கோயில்கள் அனைத்தையும் தரிசிப்பது என்பது சிரமம். முடிந்தவரை ஸ்ரீ விஸ்வநாதர் ஆலயத்திற்கு அருகே உள்ள சூரிய கோயில்களைத் தரிசித்துப் பலன் பெறலாம். காசிக்குச் செல்ல வாய்ப்பு கிட்டாதவர்கள், தமிழகத்தில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள சூரியனார் கோயிலுக்குச் சென்று வழிபடலாம். இத்தலத்தில் சூரிய பகவான், தன் இரு மனைவியருடன் நின்ற கோலத்தில் மேற்கு திசை நோக்கி அருள்புரிகிறார். அவர் எதிரில் குருபகவான் காட்சி தருகிறார். குரு பார்க்க கோடி நன்மை என்ற முதுமொழிக்கு ஏற்ப, சூரிய பகவானை வழிபட்டு அனைத்து தோஷங்களும் நீங்கி கோடி கோடியான நற்பலன்களைப் பெறலாம். மேலும் தஞ்சை திருவையாறு திருத்தலத்தில் உள்ள திருக் கண்டியூர் கோயிலில் எழுந்தருளியுள்ள கல்ப சூரியனை வழிபட்டாலும் கோள்களால் ஏற்படும் தீமைகள் மறைந்து வாழ்வில் பிரகாசம் ஏற்படும் என்று ஞானநூல்கள் கூறுகின்றன. தவிர, சிவாலயங்களில் சூரியன் விக்கிரகத்தை நவகிரகத் தொகுப்பில் காண்கிறோம். அவரை ஞாயிற்றுக் கிழமைகளில் அர்ச்சித்து வழிபட்டாலும் நல்ல பலன்கள் கிட்டும் என்பர்.









ADVERTISEMENTS
ADVERTISEMENTS